
தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முடிகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5ஆவது போட்டி நேற்று ஈஸ்ட் லண்டனில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். 2 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், பலத்த மழை பெய்தது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கப்பட்ட போட்டியின் போது தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்த நிலையில், இரவு 9.25 மணிக்கு போட்டி கைவிடப்பட்டதாக போட்டி நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.
மேலும், இரு அணிகளுக்கும் தலா புள்ளி அளிக்கப்பட்டது. இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. எனினும், 10 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதே போன்று 4 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்த நிலையில், ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.