
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்று கோலாகலமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
கரோனா தொற்றுக்கு முன்னர் போட்டிகள் நடத்தப்பட்ட முறைப்படி இந்த வருடம் நடக்கிறது. மும்பை, சென்னை அணிகள் அதன் சொந்த மைதானங்களில் மோதுவதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் புதிதாக இணைந்த இரண்டு அணிகள் அபாரமாக செயல்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்ததால் இந்த வருடமும் அவர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இளம் பட்டாளங்களைக் கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மீது கவனம் இருக்கிறது. ஏனெனில் இந்த அணியில் உள்ள இளம் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் நன்றாக செயல்பட்டு ஐபிஎல் போட்டிகளுக்குள் வந்திருக்கின்றனர். அனைத்து அணிகளின் மீது ரசிகர்களின் கவனம் இருந்து வரும் நிலையில் முன்னாள் வீரர்கள், விமர்சனர்கள் பலர் எந்த அணி கோப்பையை வெல்லும்? எந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்? எந்த அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று பல்வேறு கணிப்புகளை தெரிவித்து வருகிறார்.