
ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, பெங்கால், ஆந்திரா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், சௌராஷ்டிரா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் ஜார்கண்ட்டை வீழ்த்தி பெங்கால் அணியும், உத்தரகண்ட்டை வீழ்த்தி கர்நாடகா அணியும், ஆந்திராவை வீழ்த்தி மத்திய பிரதேச அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் சௌராஷ்டிரா - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஸ்னெல் படேல் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 9ஆம் வரிசையில் இறங்கிய டெயிலெண்டர் பார்த் பூட் அபாரமாக பேட்டிங் விளையாடி சதமடித்தார். பார்த் பூட் 111 ரன்களை குவிக்க, சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் நமன் திர் ஆகிய இருவருமே அபாரமாக விளையாடி சதமடித்தனர். பிரப்சிம்ரன் சிங் 126 ரன்களையும், நமன் திர் 131 ரன்களையும் குவித்தனர். கேப்டன் மந்தீப் சிங் சிறப்பாக விளையாடி 91 ரன்கள் அடித்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணி 431 ரன்களை குவித்தது.