
அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தமிழக வீரர் ஜெகதீசன் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசியதோடு, ஒரு போட்டியில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இதனால் ஜெகதீசன் மீதான எதிர்பார்ப்பு அடுத்தடுத்த தொடர்களில் அதிகரித்தது. அதேபோல் ஐபிஎல் மினி ஏலத்திலும் ஜெகதீசனை வாங்க பல்வேறு அணிகள் போட்டிபோடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2022-23ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி தன்மே அகர்வால் மற்றும் மிக்கில் ஜெய்ஷ்வால் ஆகியோரின் சதங்களின் காரணமாக 395 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் வாரியர் 5 விக்கெட்டுகளையும், விக்னேஷ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இரண்டாம் நாளின் உணவு இடைவேளைக்கு பின் தமிழக அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் - ஜெகதீசன் கூட்டணி களமிறங்கியது. இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.