
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் இன்று (ஜனவரி 23)முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு முகமது அலி மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் ஜெகதீசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 40 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அலி ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 63 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசனும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பின் இணைந்த பாபா இந்திரஜித் - ஆண்ட்ரே சித்தார்த் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திரஜித் 49 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய பூபதி குமார், கேப்டன் சாய் கிஷோர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்த நிலையில், ஆண்ட்ரே சித்தார்த் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.