
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இத்தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் தனது சதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், 18 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 122 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய டேனிஷ் மாலேவார் 75 ரன்களையும், ஹர்ஷ் தூபே 69 ரன்களையும் சேர்த்து அணியை சரிலிருந்து மீட்டனர். இதன்மூலம், விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ், விஜய் சங்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் அதிரடியாக விளையாடி 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 65 ரன்களையும், பிரதோஷ் ரஞ்சன் பால் 48 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்ஹ்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷ் தாக்ரே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.