ரஞ்சி கோப்பை 2025: கருண் நாயர் அபார சதம்; வலிமையான முன்னிலையில் விதர்பா!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 286 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

விதர்பா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை 2024-25 இறுதிப்போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் டாப் ஆர்டர் விரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 138 ரன்களையும், சதத்தை நெருங்கிய கருண் நாயர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 86 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Also Read
கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கேரளா அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். இருப்பினும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆதித்யா சர்வதே 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களையும், சதத்தை நெருங்கிய கேப்டன் சச்சின் பேபி 10 பவுண்டரிகளுடன் 98 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிபப்டுத்திய தர்ஷன் நல்கண்டே, ஹர்ஷ் தூபே, பார்த் ரேகாடே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அதன்படி களமிறங்கிய பார்த் ரேகாடே ஒரு ரன்னிலும், துருவ் ஷோரே 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை மீண்டும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரிகளுடன் 73 ரன்களைச் சேர்த்திருந்த டேனிஷ் மாலேவார் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய யாஷ் ரத்தோடும் 24 ரன்களில் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் சதமடித்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் விதர்பா அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 249 ரன்களைக் குவித்தது. இதில் கருண் நாயர் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 132 ரன்களையும், ஆகாஷ் வத்கர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கேரளா அணி தரப்பில் நிதீஷ், சக்சேனா, ஆதித்யா மற்றும் சந்திரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 286 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now