ரஞ்சி கோப்பை 2025: விதர்பா 379 ரன்னில் ஆல் அவுட்; ரன் சேர்க்க தடுமாறும் கேரளா!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் கேரளா அணிகள் முன்னேறின.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் டாப் ஆர்டர் விரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், கருண் நாயரும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
Trending
இதன்மூலம் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் இப்போட்டியில் சதமடிப்பார் எனா எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் விதர்பா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை டேனிஷ் மாலேவார் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 138 ரன்களுடனும், யாஷ் தாக்கூர் 5 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 153 ரன்களைச் சேர்த்த நிலையில் மாலேவார் தனது விக்கெடை இழக்க, யாஷ் தாக்கூரும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் நாச்சிகேத் பூதே 32 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கேரளா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரோஹன் குன்னுமால் ரன்கள் ஏதுமின்றியும், அக்ஷய் சந்த்ரன் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஆதித்ய சர்வதே - அஹ்மத் இம்ரான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அஹ்மத் இம்ரான் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ஆதித்யா தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் கேரளா அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆதித்யா சர்வதே 66 ரன்களுடனும், கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து 248 ரன்கள் பின் தங்கிய நிலையில் கேரளா அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now