
2018ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசியக் கோப்பை தொடர், வரும் 27ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது.ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. கடைசியாக கடந்த டி20 உலகக் கோப்பையின்போது இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது, இந்தியா 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா செயல்படுமா என்பதை காண உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளில் வீரர்கள் எப்படி செயல்பட வேண்டும், எந்த வீரர் ரொம்ப டேஞ்சர் என்பது குறித்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியாவும் இந்திய இளம் பௌலரை புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில், ‘‘தற்போதைய இந்திய அணியின் மிகப்பெரிய பலமே சுழற்பந்து வீச்சுதான். ஆசியக் கோப்பையிலும் சுழற்பந்து வீச்சாளர்கள்தான் இந்திய அணிக்கு பலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். ஒருவேளை ரவி பிஷ்னோய்க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் பட்சத்தில், அவர் நிச்சயம் எதிரணிகளுக்கு சவாலாக இருப்பார். இவர் அனில் கும்ளே போன்று ஆபத்தான வீரர். இவரால், ஒரேயொரு ஓவரில்கூட ஆட்டத்தை அப்படியே திருப்பி போட முடியும். பாகிஸ்தான் அணி இவரை குறைத்து மதிப்பிடக் கூடாது” என தெரிவித்தார்.