Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை அணியில் சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி!

டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 09, 2022 • 14:37 PM
Ravi Shastri Backs Sanju Samson For T20 World Cup Squad
Ravi Shastri Backs Sanju Samson For T20 World Cup Squad (Image Source: Google)
Advertisement

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்றுமுதல் டெல்லியில் துவங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் வலை பயிற்சியின் போது திடீரென காயத்தால் அவர் விலகியதால் இந்த தொடருக்கு ரிஷப் பந்த் தற்காலிக கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

எனவே அவரது தலைமையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல இந்தியா தயாராகியுள்ளது. இந்த தொடரில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய பெரும்பாலான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக சிறந்த ஆல்-ரவுண்டராகவும் கேப்டனாகவும் முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா, பினிஷராக மிரட்டிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்களும் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளனர்.

Trending


இருப்பினும் இதே ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ராகுல் திரிபாதி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை கோபப்படுத்தியது. அவரை போலவே பேட்டிங்கில் 458 ரன்களைக் குவித்த சஞ்சு சாம்சன் கேப்டனாக 13 வருடங்கள் கழித்து ராஜஸ்தானை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது பலரையும் ஏமாற்றமடைய வைத்தது. 

கடந்த பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் கடந்த 2015இல் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் ஒன்று நியாயமான தேவையான வாய்ப்பு கிடைக்காது இல்லையேல் கிடைத்த ஒருசில வாய்ப்புகளிலும் கச்சிதமாக செயல்படவில்லை என்ற வகையில் கடந்த 8 வருடங்களாக இவர் வெறும் 13 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

மற்ற வீரர்களைக் காட்டிலும் மைதானத்தின் நாலா புறங்களிலும் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமை பெற்றுள்ள இவர் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக பேட்டிங் செய்து அதிரடியாக துவங்கினாலும் அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் அவுட்டாகி விடுகிறார். அதுதான் அவரின் மிகப்பெரிய குறையாக இருந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் கூட 146.79 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் அடித்தாலும் 28.63 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே ரன்களை எடுத்தார்.

இருந்த போதிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு பல முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகின்றனர். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தேவையான தரமான வீரர்களை கண்டறியும் வகையில் நடைபெறும் இந்த தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் பராவாயில்லை நேரடியாக டி20 உலகக்கோப்பையில் அவர் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது பற்றி பேசிய அவர்“டி20 போட்டிகளில் ஷார்ட் பந்துகள் மிக முக்கியமான ஒன்றாகும். அதற்காக ராகுல் திரிபாதி, ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள பவுன்ஸ், வேகத்துக்கு ஈடாக செயல்படவேண்டிய கட், புல் ஷாட்களை அடிக்கும் திறமை பெற்றுள்ள சாம்சன் அங்கு அச்சுறுத்தலாக இருப்பார். உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஆஸ்திரேலிய காலச் சூழ்நிலைகளில் இதர இந்திய பேட்ஸ்மேன்களை விட அவரிடம் நிறைய ஷாட்கள் உள்ளது” என்று கூறினார்.

பொதுவாகவே ஆஸ்திரேலிய மைதானங்களில் இயற்கையாக காணப்படும் வேகம், பவுன்ஸ் போன்ற அம்சங்களை எதிர்கொள்ள நிறைய இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினாலும் அதை சிறப்பாக எதிர்கொள்ளும் திறமை பெற்றுள்ள சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலிய மண்ணில் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

அவர் கூறுவது போல அதிரடியாகவும் அதே சமயம் ஷார்ட் பிட்ச் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளும் திறமை சாம்சனிடம் ஏராளமாக உள்ளது. அந்த திறமை இதர இந்திய பேட்ஸ்மேன்களிடம் குறைவாக காணப்படுவதால் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக தென்னாப்பிரிக்க தொடர் உட்பட இந்தியா 30 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் முழுமையாக விளையாடுவது சந்தேகமே என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர்,“உலகக்கோப்பை இருந்தாலும் இந்த 30 போட்டிகளிலும் முக்கிய வீரர்கள் அனைவரும் விளையாடுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. காயம் போன்ற விஷயம் நடக்காத வரை அவர்கள் பகிர்ந்து கொண்டு விளையாடுவார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரையும் ஒன்றாக உலக கோப்பையில் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement