
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.
அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும், ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஹ்சன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஜெய்ஸ்வால் - ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரிஷப் பந்த் 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 56 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து கேல் ராகுலும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் ரவீந்திர ஜடேஜாவும் அரைசதம் கடந்து விளையாடி வருகிரார். இதன்மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது. இதில் அஸ்வின் 102 ரங்களுடனும், ஜடேஜா 86 ரங்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் சார்பில் ஹாசன் மஹ்மூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.