
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய 9 போட்டிகளிலும் வெற்றிகளை பதிவு செய்து தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக அசத்தியுள்ளது. குறிப்பாக நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ராகுல் 102, ஸ்ரேயாஸ் ஐயர் 128 எடுத்த உதவியுடன் 411 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதை துரத்திய நெதர்லாந்து தங்களால் முடிந்தளவுக்கு போராடியும் 250 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறுதல் வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் வெளியேறியது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். இந்த வெற்றியில் அனைவரும் முக்கிய பங்காற்றிய நிலையில் சுழலில் வழக்கம் போல மிகச்சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா 9 ஓவரில் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.