
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்தியா அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலீப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் பிலிப் சால்ட் 43 ரன்களிலும், பென் டக்கெட் 32 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பட்லரும் அரைசதம் கடந்த கையோடு 53 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஜேக்கப் பெத்தெல் 51 ரன்களையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ரானா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா அகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.