
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “இப்போட்டியில் தோல்வியடைந்தது பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் எங்கள் அணி வீராங்கனை போராடிய விதத்தைப் பார்த்து உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். அடுத்த போட்டியில் விளையாட எங்களுக்கு 2 நாள்கள் உள்ளன, என்ன தவறு நடந்தது என்பதைப் பற்றி யோசிப்போம். இத்தொடரில் முதல் முறையாக நாங்கள் பேட்டிங் செய்தோம்.
எனவே இன்று விஷயங்களைப் பற்றி நாங்கள் மிகவும் விமர்சன ரீதியாக இருக்க மாட்டோம். அடுத்த 2 நாட்களில் எங்களுக்கு நேர்மறையாக இருப்பது முக்கியம். இந்த மைதானத்தில் பந்து நன்றாக வந்து கொண்டிருந்தது, அவுட்ஃபீல்ட் நிச்சயமாக வேகமாக இருந்தது, மேலும் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் கொஞ்சம் உதவியது. பந்துவீச்சை பொறுத்தவரையில் பவர்பிளேயில் நாங்கள் நன்றாகத் தொடங்கினோம்.