
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தியது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ரவால் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மந்தனா 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, 37 ரன்களைச் சேர்த்த கையோடு பிரதிகா ராவலும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோ 13 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 9 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், தீப்தி சர்மா 4 ரன்னிலும், அமஞ்சோத் கவுர் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியதால், இந்திய அணி தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் மற்றும் ஸ்நே ரானா இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபாரமாக விளையாடிய ரிச்சா கோஷ் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்நே ரானா 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த ரிச்சா கோஷ் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் 94 ரன்களை சேர்த்தனர்.