
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடியனர்.
இதில் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி தங்கள் ஃபார்மை நிரூபித்த நிலையில், ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சோபிக்க தவறினர். இதனால் அவர்களின் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுதவிர்த்து ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அடுத்த சுற்று போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கயாம் காரணமாக ஓய்வில் இருந்த இளம் ஆல் ரவுண்டர் ரியான் பராக் தற்சமயம் அடுத்த சுற்று ரஞ்சி போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.