
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபரில் பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது.
எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று மனுத்தாக்கல் செய்யவுள்ளார். இதையடுத்து அக்டோபர் 18இல் நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக்குழுவில் பிசிசிஐயின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வாகவுள்ளார்.
பொருளாளர் பதவிக்கு பாஜகவைச் சேர்ந்த ஆஷிஷ் ஷெலார் போட்டியிடவுள்ளார். இன்றும் நாளையும் பிசிசிஐ பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்பவர்கள் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் தலைவராக உள்ள பிரிஜேஷ் படேல், விரைவில் 70 வயதை அடையவுள்ளதால் அவரால் அப்பதவியில் தொடர முடியாது. அப்பதவிக்கு அருண் துமால் போட்டியிடவுள்ளார்.