X close
X close

சிறுவனை காப்பற்ற ரோவ்மன் பாவெல் எடுத்த விபரீத முடிவு; ரசிகர்கள் பாராட்டுகள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பாவெல் செய்த செயல் ரசிகர்களிடையே பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 27, 2023 • 20:09 PM

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா அணி நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு 259 ரன்களை வெறித்தனமாக சேசிங் செய்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற உலக சாதனை படைத்து தொடரை சமன் செய்துள்ளது.

செஞ்சூரியனில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் சரமாரியாக அடித்து நொறுக்கி 20 ஓவரில் 258/5 ரன்கள் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது. அதிகபட்சமாக 39 பந்துகளில் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயில் (47) சாதனையை உடைத்த ஜான்சன் சார்லஸ் 10 பவுண்டரி 11 சிக்சருடன் 118 (46) ரன்கள் குவித்தார்.

Trending


இதைத்தொடர்ந்து 259 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு 152 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கம் கொடுத்த குயின்டன் டீ காக் சதமடித்து 100 (44) ரன்களும் ரீசா ஹென்றிக்ஸ் 68 (28) ரன்களும் எடுக்க இறுதியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் 38* (21) ரன்கள் விளாசி வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.

அப்படி ரன் மழை பொழிந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் அடித்ததால் பவுண்டரி நோக்கி பறந்த ஒரு பந்தை தடுப்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் போவல் வேகமாக துரத்திச் சென்றார். ஆனால் பந்தின் மீது கவனத்தை வைத்து ஓடி வந்த அவர் பவுண்டரி எல்லையின் அருகே வந்த போது தான் அங்கே 2 சின்ன குழந்தைகள் பந்தை எடுத்து போடுவதற்காக பவுண்டரி எல்லைக்குள் இருப்பதை கடைசி நேரத்தில் பார்த்தார். அந்த குழந்தைகளை பார்த்த காரணத்தால் கிட்டத்தட்ட பந்தை நெருங்கிய அவரால் பவுண்டரியை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஆனால் பந்தை தடுப்பதற்காக வேகமாக ஓடி வந்த வேகத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாத அவர் பவுண்டரி எல்லைக்குள் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் மீது மோதும் கோணத்தில் சென்றார். இருப்பினும் அந்த குழந்தை மீது மோதி விடக்கூடாது என்று எண்ணத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னை முடிந்தளவுக்கு கட்டுப்படுத்திய அவர் இடது பக்கத்தில் லேசாக நகர்ந்து மைதானத்தில் இருந்த தடுப்புச் சுவரை தாண்டி எகிறி குதித்து தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கீழே விழுந்தார்கள்.

நல்ல வேலையாக குழந்தையை காப்பாற்றுவதற்காக அதற்காக பெரிய ரிஸ்க் எடுத்த, அவர் தரையில் விழாத அளவுக்கு இடையே இருந்த சில பாதுகாப்பு வளையங்கள் காப்பாற்றி விட்டன. அதனால் போட்டி நிறுத்துப்பட்டு நிலையில் லேசான காயங்களை மட்டும் சந்தித்த அவர் தேவையான முதலுதவிகளை எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடினார். அப்படி தாம் காயமடைந்தாலும் பரவாயில்லை ஆனால் குழந்தைகள் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக அந்த பிஞ்சு குழந்தைகள் மீது மோதாமல் நகர்ந்து சென்று கீழே விழுந்த வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் ரோவ்மன் போவலை என்னா மனுஷன்யா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


Win Big, Make Your Cricket Tales Now