
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் டோனி டி ஸோர்ஸி 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ரியான் ரிக்கெல்டன் - டெம்பா பவுமா அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த டெம்பா பவுமா 58 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் 103 ரன்களில் ரிக்கெல்டன் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 52 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஐடன் மார்க்ரம் 52 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து கடின இலக்கை நோக்கி ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.