
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தோடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும், ஷுப்மன் கில் 2 ரன்களிலும் என அறிமுக வீரர் நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை மார்கோ ஜான்சென் மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தவறவிட தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் வாய்ப்பும் கைநழுவியது.