
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் - ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய திலக்வர்மாவும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சாய் சுதர்ஷனுடன் இணைந்த கேப்டன் கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் அரைசதம் கடந்தார். இதன்மூலம் தனது முதலிரண்டு போட்டிகளில் அரைசதம் கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் சாய் சுதர்ஷன் பெற்றார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 62 ரன்களை எடுத்திருந்த சாய் சுதர்ஷன் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.