Advertisement

தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியும் மழையால் பாதிக்ககூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 12, 2023 • 11:03 AM
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் டர்பன் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போடாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இருஅணிகளும் இடையேயான 2ஆவது ஆட்டம் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை இன்றைய ஆட்டமும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள டி 20உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைப்பதில் இந்திய அணி நிர்வாகத்துக்கு சிக்கல் எழக்கூடும். இன்றைய ஆட்டம் உட்பட உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மொத்தம் 5 சர்வதேச டி 20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி பங்கேற்கிறது.

Trending


இதில் வரும் ஜனவரி மாதம் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரும் அடங்கும். டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடருக்கு 17 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்தது. இதில் இளம் வீரர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தனர். தென் ஆப்பிரிக்க மண்ணில் இவர்களது திறனை சோதித்து பார்க்கும் வகையிலேயே பிசிசிஐ திட்டம் வகுத்து இருந்தது.

ஆனால் அங்கு முதல் டி 20 ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 2-வது ஆட்டத்துக்கும் மழை இடையூறு இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் இளம் வீரர்களின் திறனை கண்டறிவதில் இந்திய அணி நிர்வாகத்துக்கு தேக்க நிலை உருவாகி உள்ளது. மேலும் அணியில் உள்ள 17 வீரர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள அணியின் பேட்டிங் வரிசையில் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மட்டுமே டி 20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தங்களது இடத்தை உறுதி செய்துகொள்ளும் நிலையில் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சீராக ரன்கள் குவித்து வரும் நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் டி 20 அணிக்கு திரும்பினால் இவர்களது நிலை என்னவாகும் என்பது இதுவரை தெளிவுப்படுத்தப்படாமல் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க டி 20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு போதிய அவகாசம் இல்லாததால் வீரர்களின் திறனை கண்டறிய ஐபிஎல் தொடரை இந்திய அணி தேர்வுக்குழுவினர் உற்று நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் திட்டமிடல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

எப்படி இருப்பினும் எதிர்வரும் சர்வதேச டி 20 போட்டிகளை முடிந்த அளவு சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் இந்திய அணி கவனம் செலுத்தக்கூடும். ரிங்கு சிங்குவை போன்றே ஜிதேஷ் சர்மாவிடமும் குறுகிய வடிவிலான போட்டிகளில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறன் காணப்படுவது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், மருத்துவ காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்கா செல்லவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெறக்கூடும். உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அணிக்கு திரும்பி உள்ள ரவீந்திர ஜடேஜாவும் அசத்த காத்திருக்கிறார். அவருடன் 2ஆவது சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறக்கூடும்.

தென் ஆப்பிரிக்காவும் இந்திய அணியை போன்றே டி 20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக 5 சர்வதேச டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை சிறப்பாக தொடங்குவதில் அந்த அணி தீவிரம் காட்டக்கூடும். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் பந்து சற்று கூடுதல் பவுன்ஸ் ஆகும் என்பதால் இளம்வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்க தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களான மார்கோ யான்சன், கோட்ஸி ஜெரால்டு ஆகியோர் ஆயத்தமாக உள்ளனர்.

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், ரீசா ஹென்றிக்ஸ், டெவால் பிரீவிஸ் போன்ற நட்சத்திர வீரர்களுடன், தப்ரைஸ் ஷம்ஸி, கேசவ் மகாராஜ் போன்ற அனுபவமிக்க சுழற்பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ளதால் நிச்சயம் இந்திய அணிக்கும் கடும் நெருக்கடியைக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன. 

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கே), டோனோவன் ஃபெரீரா, டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், லிசாட் வில்லியம்ஸ்

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கே), இஷான் கிஷன், ரின்கு சிங், ரவீந்திர ஜடேஜல், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷான்
  • பேட்ஸ்மேன்கள்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்-ரவுண்டர்: ரசீந்திர ஜடேஜா, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: ஜெரால்ட் கோட்ஸி, ரவி பிஷ்னோய்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement