-mdl.jpg)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி டர்பனில் நேற்று முந்தினம் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான் இரண்டாவது டி20 போட்டி இன்று க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடியில் இருவரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் இணைந்த திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த திலக் வர்மா 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யாவுடன் இணைந்த ரிங்கு சிங் முதல் பந்திலிருந்தே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் கேப்டன் இன்னிங்ஸை விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.