
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது.
மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றன.
அந்தவகையில் இங்கிலாந்தின் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸின் பிராண்டன் கிங், ஆஃப்கானிஸ்ஹானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் உள்ளிட்ட வீரர்கள் தற்போது எஸ்ஏ20 அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த தொடரின் தூதராக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் நியமிக்கபட்டிருந்தார். இந்நிலையில், இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கும் இந்த தொடரின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.