
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரஹானே 31 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க சிஎஸ்கே அணி சற்று தடுமாற்றம் கண்டது.
களத்தில் நின்று போராடி வந்த டெவான் கான்வெ, அரைசதம் அடித்த அடுத்த பந்திலே அவுட் ஆனார். இதனால் சிஎஸ்கே அணிக்கு தேவையான ரன்ரேட் மிகவும் உயரத்திற்கு சென்றது. கடைசி மூன்று ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்டபோது, களத்தில் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் தோனி இருவரும் சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி நம்பிக்கை கொடுத்தனர்.
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் இரண்டு ஒய்டுகள் வீசப்பட்டது. இதனால் டென்ஷன் ராஜஸ்தான் பக்கம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. அதற்கு அடுத்ததாக அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய தோனி, ராஜஸ்தானின் நம்பிக்கையை சீர்குலைத்தார். கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது, சிறப்பான யார்க்கர் வீசி சந்திப் சர்மா கட்டுப்படுத்தியதால் டென்ஷன் நிறைந்த இந்த மேட்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.