
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் தொடங்குவதற்குள் இறுதி கட்ட மாற்றங்கள் பல நிகழும் என செய்திகள் வெளியாகின. ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய அக்சர் பட்டேல் காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவருக்கு பதில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் நடு வரிசையில் இடம் பெறக்கூடிய வீரராக கருதப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மீண்டும் வழங்கப்படவில்லை. குறிப்பாக கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். இதனால் உலககோப்பை தொடரில் சாம்சன் விளையாடுவார் என கேரள ரசிகர்கள் மிக நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள்.
ஆனால் இசான் கிஷன் அந்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்டு தனது இடத்தை உறுதி செய்துவிட்டார். பற்றாத குறையாக கேஎல் ராகுலும் அணியில் சேர்ந்திருப்பதால் தற்போது சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் போனது. எனினும் விக்கெட் கீப்பராக இல்லை ஆனாலும் சாதாரண பேட்ஸ்மேனாக அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மாவுக்கு ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.