
Indian Premier League: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் மட்டும் அவர் விளையாடி வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஐபிஎல் தொடரின் என்னுடைய பயணம் இன்றுடன் முடிவடைகிறது. அனாலும் மற்ற லீக் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவாக இருந்த ஐபிஎல், பிசிசிஐ மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது எனது எதிர்காலத்தை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறினார்.