
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ் காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.