
நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடிய பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் 9 லீக் போட்டிகளில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்தது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி தொடர்ந்து 8ஆவது முறையாக உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது.
அதை விட கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகவும் வரலாற்றில் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் எதிர்பார்த்ததை விட பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சுமாராக செயல்பட்டது. அதனால் லீக் சுற்றுடன் வெளியேறிய அந்த அணி ஏராளமான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தது.
மேலும் இந்த தோல்விகளுக்கு பாபர் அசாம் கேப்டனாக சுமாரான முடிவுகளை எடுத்ததும் பேட்ஸ்மேனாக பெரிய ரன்கள் குவிக்க தவறியதும் முக்கிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்று நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்த நிலையில் நாடு திரும்பியதும் அதைப்பற்றி முடிவெடுக்க உள்ளதாக பாபர் அசாம் தெரிவித்திருந்தார்.