
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக துவக்க வீரர் சாய் ஹோப் 115 ரன்களும், கேப்டன் நிக்கலஸ் பூரான் 74 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்கள்.
இந்த போட்டியில் அசத்தலான அதிரடி ஆட்டத்தை விளையாடிய அக்சர் பட்டேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான், “இந்த போட்டியில் ஒரு அணியாக நாங்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் இந்த போட்டியின் இறுதிவரை எங்களது நம்பிக்கையை இழக்கவில்லை, அதுதான் இந்த வெற்றியின் சிறப்பே.