
உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மீது தான் அனைவரின் கண்களும் திரும்பியுள்ளன. இதற்காக ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரர்கள் அகமதாபாத் நகரத்திற்கு சென்றுவிட்டனர். அதேபோல் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தை அடைந்துவிட்டார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சுப்மன் கில்லால் பங்கேற்க முடியவில்லை. இவருக்கு மாற்றாக இளம் வீரரான இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினார்.
தற்போது அகமதாபாத்தை அடைந்துள்ள ஷுப்மன் கில், இன்றே பயிற்சியை தொடங்கியுள்ளார். இருப்பினும் அவரின் உடல்நலத்தை பொறுத்தே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அகமதாபாத் மைதானத்தில் விளையாடினாலே விஸ்வரூபம் எடுக்கும் ஷுப்மன் கில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.