
ஐசிசி டி20 உலககோப்பையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான ஆட்டம் பல்வேறு சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் வித்தித்துள்ளது. இப்போட்டியில் 160 ரன்கள் என்ற இலக்கை துரத்த இந்திய அணி தடுமாறினாலும், விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இதில் உயரத்திற்காக நோ பால், 2 அகல பந்துகள் , பைசில் 3 ரன்கள் என இந்தியாவுக்கு சாதகமாக விசயங்கள் பல நடந்தது. இதில் ஏற்கனவே விராட் கோலி அடித்த சிக்ஸ் நோ பால் கிடையாது என்று பாகிஸ்தான் ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், அதற்கான கிடைத்த ஃப்ரி ஹிட் பந்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஃபிரி ஹிட் பந்தை கோலி ஸ்விப் செய்ய முயன்ற போது, அந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்து பின் நோக்கி சென்றது.
அது ஃப்ரி ஹிட் என்பதால் அவுட் இல்லை. இதனால், விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 3 ரன்கள் ஓடினர். இதனை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் விரர்கள், பந்து ஸ்டம்பில் பட்ட பிறகு ஓட கூடாது. இதனை டேத் பாலாக அறிவிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நடுவர்கள், 3 ரன்களை பைசாக வழங்கினர். இதனால் பாகிஸ்தான் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் கடுப்பாகினர்.