
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 12) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கமிந்து மெண்டிஸும், 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஜனித் லியானகேவும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே இணை பொறுப்பான ஆட்டத்தாஇ வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.