
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று தாம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேனும் 2 ரன்களில் நடையைக் கட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கிளென் பிலீப்ஸ் 4 ரன்களுக்கும், மைக்கேல் பிரேஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும், மிட்செல் ஹெய் 3 ரன்களுக்கும் என நடையைக் கட்ட, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு தொடக்க வீரர் வில் யங்கும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இதனால் நியூசிலாந்து அணி 56 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மிட்செல் சான்ட்னர் - ஜோஷ் கிளார்க்சன் இணை நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.