முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஸ்நே ரானா அபாரம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இனைந்து முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Also Read
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதிகா ராவல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். பின் அவருடன் இணைந்த ஹர்லீன் தியோலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 78 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஹர்லீன் தியோலும் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 ரன்னிலும், ரிச்சா கோஷ் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும், காஷ்வி கௌதம் 5 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் நி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 276 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் நோகுலுலேகோ மிலாபா 2 விக்கெட்டுகளையும், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், நாடின் டி கிளர்க், அன்னேரி டெர்க்சன் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் ப்ரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தஸ்மின் பிரிட்ஸ் தனது அரைசதத்தி பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா வோல்வார்ட் 43 ரன்களைச் சேர்த்திருந்த் நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லாரா குட்ஆல் 9 ரன்னிலும், கரபோ மெசோ 7 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சுனே லூஸ் 28 ரன்களுக்கும், சோலே ட்ரையான் 18 ரன்களுக்கும், அன்னேரி டெர்க்சன் 30 ரன்களுக்கும் நதின் டி கிளார்க் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தலும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தஸ்மின் பிரிட்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த தஸ்மின் பிரிட்ஸும் 109 ரன்களை சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து கள்மைறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்களிலேயே ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ரானா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now