
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இனைந்து முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதிகா ராவல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். பின் அவருடன் இணைந்த ஹர்லீன் தியோலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 78 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஹர்லீன் தியோலும் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 ரன்னிலும், ரிச்சா கோஷ் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.