தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹென்றிக்ஸூடன் இணைந்த டோனி டி ஸோர்ஸியும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவு செய்த நிலையில், மறுமுனையில் டோனி டி ஸோர்ஸி 33 ரன்னிலும், டெவால்ட் பிரீவிஸ் 9 ரன்னிலும், மேத்யூ பிரீட்ஸ்கி ஒரு ரன்னிலும், கேப்டன் பெரீரா 10 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து 60 ரன்களைச் சேர்த்த கையோடு ரீஸா ஹென்றிஸுக்ம் விக்கெட்டை இழக்க, இறுதியில் ஜார்ஜ் லிண்டே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினீஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும், சைம் அயுப் 2 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.