
இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 29) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டியில் விளையாடும் இரு அணியின் பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.