பாகிஸ்தான் அணி தற்சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஃபைசலபாத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தோடரை வெல்லும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பக்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான இலங்கை அணியில் மதிஷா பதிரானா நீக்கப்பட்டுள்ளார்.