
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் நிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தன் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுப் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் முகமது ஹாரிஸ் 6 ரன்களுக்கும், காசிம் அக்ரம் ரன்கள் ஏதுமின்றியும், ஹைதர் அலி 14 ரன்களுக்கும், ஆஃப்ராத் மின்ஹாஸ் 10 ரன்களுக்கும், அப்துல் சமத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தாடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஒமைர் யூசுஃப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஒமைர் யூசுஃபும் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் துஷன் ஹெமந்தா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.