
வெஸ்ட் இண்டிஸின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரிமியர் லீக்கின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கீரன் பொல்லார்டு கேப்டனாக இருக்கும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும், செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில், வரலாற்று சிறப்புமிக்க ஒரு முக்கிய சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த வருட கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில், ஓவர்கள் மெதுவாக வீசுவதற்கு வித்தியாசமான தண்டனை முறைகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஓவரை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீச வைப்பதோடு மட்டுமல்லாமல், திடீர் சுவாரசியத்தையும் உண்டாக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. கரீபியன் பிரீமியர் லீக்கில் கொண்டுவரப்பட்ட புதிய விதி என்னவென்றால், 18ஆவது ஓவருக்குள் நுழையும் பொழுது மெதுவாக பந்துவீசி இருந்தால், அந்த ஓவரின் போது வெளிவட்டத்தில் 4 பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். இதே 19 ஆவது ஓவர் என்றால், வெளிவட்டத்தில் மூன்று பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும்.
இந்த இடத்தில்தான் இதே விதி 20 ஆவது ஓவருக்கு வித்தியாசமாக மாறுகிறது. அதாவது 20ஆவது ஓவரின் போது, குறித்த நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கப்பட்டிருக்காமல் இருந்தால், வெளிவட்டத்தில் மூன்று பீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அணியில் இருந்து ஒரு வீரர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுவார். மொத்தம் 10 பேரை வைத்து மட்டுமே விளையாட வேண்டும். கால்பந்து போட்டியில் இருப்பது போல இந்த புதிய விதி கரீபியன் பிரிமீயர் லீக்கில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.