
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவதாக எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பவுண்டரி சிக்ஸருடன் தொடங்கிய அபிஷேக் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
தொடர்ந்து சிரப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 68 ரன்களைச் சேர்த்தனர். பின்னர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதீஷ் ரெட்டி 5 ரன்களிலும், அப்துல் ஷமத் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.