
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குறித்து ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் இந்திய ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா ஆகியோரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தக்கவைத்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.