-mdl.jpg)
ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று துவங்கிய இததொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்பதற்கு ஈடாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏனெனில் கடந்த 10 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார். இருப்பினும் 33 வயதிலேயே சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் அதிக சதங்கள் அடித்த ஜாம்பவான் வீரர்களின் பட்டியலில் நிற்கும் விராட் கோலியின் அருமையை உணர்ந்து நிறைய வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அவர்களது ஆதரவுடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் இந்த தொடரில் களமிறங்கிய அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அதிர்ஷ்டத்துடன் 35 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் 34 பந்துகளில் 35 ரன்களை எடுத்து மெதுவாக விளையாடியதால் மீண்டும் விமர்சனத்தை சந்தித்த அவர் ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தடுமாறாமல் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (44) ரன்களை 130க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் விளாசி பதிலடி கொடுத்தார்.