
இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார்.
மேலும் இத்தொடரில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக புதிய தகவல் வெளியானது. மேற்கொண்டு ஒருநாள் அணிக்கான கேப்டன் போட்டியில் ஷுப்மன் கில்லின் பெயரும் அடிபடுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய கையோடு அவர் நாடு திரும்புவார் என்றும், அதனால் ஒருநாள் அணியில் தன்னை சேர்க்க வேண்டாம் என்றும் ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டானாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.