
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. குவாலியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதைல் பேட்டிங் செய்த வங்கதேச அணி மெஹ்தி ஹசன் மிராஜ் (35), நஜ்மல் ஹுசைன் ஷாண்டோ (27) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா, மயங்க் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியானது 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 39 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 ரன்களையும் சேர்த்தனர்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களை விளாசித்தள்ளினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் சில சாதனைகளையும் குவித்துள்ளார்.