
இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. அதைத்தொடர்ந்து அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற 5 போட்டிகள் டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடரிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்குகிறது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினம் என்பதால் மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் அணியால் சாதிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.