Advertisement

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் - ரிக்கி பாண்டிங்கின் தேர்வு!

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்யவேண்டும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 21, 2022 • 15:10 PM
T20 World Cup 2022 - Would try every way to have Rishabh Pant and Dinesh Karthik in playing XI, says
T20 World Cup 2022 - Would try every way to have Rishabh Pant and Dinesh Karthik in playing XI, says (Image Source: Google)
Advertisement

உலகில் உள்ள அனைத்து முன்னணி கிரிக்கெட் அணிகளும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் தங்களது நாட்டுக்காக விளையாடப் போகும் தரமான வீரர்களை கண்டறிவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியடைந்து லீக் சுற்றுடன் நடையை கட்டிய இந்தியா, இம்முறை புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.

முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகளை சொந்த மண்ணில் அவரது தலைமையில் துவம்சம் செய்த இந்தியா சமீபத்தில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இதை அடுத்து வெஸ்ட் இண்டீசில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரில் ஓய்வெடுத்தாலும் அடுத்ததாக நடைபெறும் டி20 தொடரில் அவர் கேப்டனாக மீண்டும் திரும்புகிறார்.

Trending


அந்த வகையில் இந்த 6 மாத காலத்தில் கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற முதன்மை வீரர்களை தவிர்த்து புவனேஸ்வர் குமார், சூரியகுமார் யாதவ், ஹர்ஷல் படேல் போன்ற தரமான வீரர்கள் டி20 உலக கோப்பையில் விளையாடும் அளவுக்கு சமீபத்திய தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் தலைமை கூட்டணியிடம் தங்களது திறமையை வெளிப்படுத்தி நம்பிக்கையைப் பெற்றுள்ளார்கள்.

அதேபோல் கடந்த உலக கோப்பையில் காயத்தால் சுமாராக செயல்பட்டு வெளியேறிய ஹர்திக் பாண்டியா இம்முறை ஐபிஎல் கோப்பையை வென்று அணிக்கு திரும்பி அதில் சிறப்பாக செயல்பட்டு தனது இடத்தை உறுதி செய்துள்ளார். அந்த வரிசையில் இந்திய அணியில் விளையாடப்போகும் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி தொடர்ந்து நிலவி வருகிறது. இதில் சமீபத்திய தொடர்களில் அசத்திய இஷன் கிஷன் பேக்-அப் தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். அதனால் நேரடியாக முதன்மை அணியில் விளையாடும் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

இதில் ஒரு கட்டத்தில் இந்திய கிரிக்கெட் கேரியர் முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2022 அபாரமாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து டி20 உலக கோப்பையில் விளையாடும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் 2018 முதல் முதன்மையான விக்கெட் கீப்பராக கருதப்படும் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் டி20 கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு சொதப்பி வருகிறார். இருப்பினும் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் தம்மால் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபித்துள்ளார்.

கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் 3 போட்டிகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். மறுபுறம் ரிஷப் பந்த் 2 போட்டிகளில் 27 ரன்கள் எடுத்தார். மேலும் என்னதான் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்கும் பினிஷெராக தினேஷ் கார்த்திக் நிரூபித்தாலும் அவரை விட வயதில் இளமையாக இருக்கும் ரிஷப் பந்த் தான் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தங்களது நாட்டில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இந்த இருவரையுமே விளையாட வைக்க முயற்சிப்பேன் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 

இந்திய அணியில் விளையாடப்போகும் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு ஐசிசி இணையத்தில் அவர் பதிலளித்த அவர், “50 ஓவர் கிரிக்கெட்டில் அவரால் (பந்த்) என்ன செய்ய முடியும் என்பதை பார்த்தோம். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்கு தெரியும். மறுபுறம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் அபாரமாக செயல்பட்டார். எனவே இந்த இருவரையும் எனது அணியில் விளையாட வைப்பதற்கான வழியை நான் தேடுவேன்.

3, 4, 5 ஆகிய இடங்களில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா என்ற பேட்டிங் வரிசை அதிரடியானதாக இருக்கும். இதனால் இஷான் கிசான், சூரியகுமார், ஸ்ரேயஸ் ஆகியோறை தவிற விடும் நிலை ஏற்படும். இருப்பினும் தற்போதுள்ள பார்முக்கு சூரியகுமார் யாதவை தவற விடக்கூடாது. இந்த அளவுக்கு திறமை வாய்ந்த வீரர்கள் இருப்பதால் இந்திய அணியை தேர்வு செய்வது சிரமமான ஒன்றாகும். எது எப்படி இருந்தாலும் இஷான் கிஷனை காட்டிலும் பந்த் மற்றும் கார்த்திக் ஆகியோரை நான் தேர்வு செய்வேன்” என்று கூறினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement