1-mdl.jpg)
டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று குரூப் 2 பிரிவில் 2ஆவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்திய அணி, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி உத்வேகம் பெற முயற்சிக்கக்கூடும்.
இந்திய அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல் 3 ஆட்டங்களில் 22 ரன்களே சேர்த்துள்ள போதிலும் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது. மேலும் பலம் குறைந்த வங்கதேச அணிக்கு எதிராக கேஎல் ராகுல் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி பார்முக்கு திரும்பக்கூடும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஏனெனில் முஸ்தாபிசூர் ரஹ்மான், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஜ், ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்மூத் ஆகியோரை உள்ளடக்கிய வங்கதேச அணியின் பந்து வீச்சுத்துறை தாக்கத்தை ஏற்படுத்திக் கூடிய அளவிலான உலகத்தரத்தில் இல்லை.
இதனால் இன்றைய ஆட்டத்தை கேஎல் ராகுல் சரியாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த தினேஷ் கார்த்திக் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கக்கூடும். மேலும் தீபக் ஹூடா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக யுவேந்திர சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். ஏனெனில் வங்கதேச அணி சுழற்பந்து வீச்சில் திணறக்கூடியது. 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அந்த அணி ரிஸ்ட் சுழலில் 54 விக்கெட்களை தாரை வார்த்துள்ளது. இதனால் யுவேந்திர சாஹல் சவால் தரக்கூடும்.