
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி குரூப் 2இல் அங்கம் வகிக்கிறது. தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை கடைசி பந்தில் தோற்கடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நெதர்லாந்துடன் இன்று சிட்னியில் மோதுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான த்ரிலிங்கான ஆட்டத்தில் 160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா விராட் கோலியின் (82 ரன்) பிரமாதமான பேட்டிங்கால் இறுதிபந்தில் வெற்றியை வசப்படுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டது. இனி இந்திய அணி நெருக்கடி இன்றி விளையாடலாம். அதுவும் நெதர்லாந்து, குட்டி அணி என்பதால் அதிக சிரத்தை எடுக்க வேண்டிய தேவை இருக்காது.
ஆனாலும் ரன்ரேட் அவசியம் என்பதால் பெரிய வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டுவதில் நமது வீரர்கள் கவனம் செலுத்துவார்கள். தனது கடைசி 5 ஆட்டங்களில் வெறும் 64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா பழைய நிலைக்கு திரும்புவதற்கு இந்த ஆட்டம் அருமையான வாய்ப்பாகும்.