
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள சத்திஷ்கர் மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விஜயநகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சத்தீஷ்கர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளமிட்டனர். இதில் ரஹேஜா 28 ரன்னிலும் ஜெகதீசன் 21 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பூபதி குமாரும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இந்திரஜித் மற்றும் பிரதோஷ் பால் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், பிரதோஷ் பால் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 75 ரன்களில் இந்திரஜித்தும் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 71 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சத்தீஷ்கர் அணி தரபில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷுபம் அகர்வால், பிரதீக் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.